பிரபாகரனா? பொட்டம்மானா? யார் துரோகி?
"
யாழ்ப்பாணத்தை மீட்க புலிகள் இறுதி யுத்தம்" என்ற தலைப்போடு
செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரகசிய கலந்துரையாடலில் கதைக்கப்பட்டவை என்ற அறிமுகத்தோடு சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வெளியிட்டது இலங்கை அரசபடையின் வலைத்தளம்.
இதில், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசியக் கலந்துரையாடலில் பரிமாறப்பட்ட விடயங்கள் வெளிவந்துள்ளன. பிரபாகரனும் பொட்டம்மானும் இரகசியமாகப் பேசுபவற்றை அறிந்துகொள்ளும் அளவுக்கு சிறிலங்கா, இந்தியப் புலனாய்வுத்துறைகள் வளர்ச்சியடைந்துள்ளது பிரமிக்க வைக்கிறது. பாசிசப் புலிகளின் அழிவு தொடங்கிவிட்டதென்பதை இது காட்டுகிறது.
ஆனால் இதுகுறித்து சில கேள்விகள் எழும்புகின்றன.
குறிப்பிட்ட கலந்துரையாடல் தொடர்பான விவரங்களை யார் இலங்கை அரசபடைக்கு வழங்கியது என்பதே அது.
பிரபாகரன், பொட்டம்மான் - இருவரில் ஒருவர்தான் இத்தகவல்களை வழங்கியிருக்க வேண்டும்.
யார் அந்தக் கறுப்பு ஆடு என்பதைப் புலிகள் கண்டுபிடிப்பார்களா?
ஏற்கனவே இந்திய உளவுத்துறைக்கு விலைபோன மாத்தையாவைப் போல் இப்போது பொட்டம்மானோ பிரபாகரனோ விலைபோய்விட்டார்கள். இவர்களில் யார் என்ற ஐயத்துக்கு விடை கிடைக்குமா? இதை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்?
பொட்டம்மான்தான் அந்தத் துரோகியென்றால், பிரபாகரன் அவரை விசாரிக்க வேண்டும்.
பிரபாகரன்தான் துரோகியென்றால் பொட்டம்மான் அவரை விசாரிக்க வேண்டும்.
இருவருக்குள்ளும் யார் அந்தத் துரோகியென்ற குழப்பம் வந்தால், நடுநிலையான மூன்றாவது சக்தியொன்றிடம் விசாரணையை ஒப்படைக்கலாம். சக இயக்கமென்ற வகையிலும், ஏற்கனவே இப்படியான துரோக நடவடிக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்கள் என்ற வகையிலும் எமது இயக்கம் இந்த விசாரணையைப் பொறுப்பெடுக்க ஆயத்தமாக இருக்கிறது. இதுபற்றிப் புலிகளின் எண்ணத்தை அறிய ஆவல்.
அதேநேரம், இவ்வளவு தெரிந்த அரசபடைக்கு புலிகளின் போர்த்தந்திரமும் திட்டமும் முழுமையாகத் தெரிந்திருக்கும். இந்தநிலையில் பழைய திட்டத்தோடு யுத்தம் செய்வது புலிகளுக்கு முழு அழிவையே தரும். எனவே, யார் அந்தத் துரோகியென்று கண்டுபிடித்துக் களையெடுத்த பிறகு, புதிய திட்டங்களோடு புலிகள் களமிறங்க வேண்டும்.
யாழ்ப்பாணம்தான் இலக்கென்று அரசுக்குத் தெரிந்துவிட்டதால் மணலாறு மீது படையெடுப்பது புலிகளுக்கு நன்மை பயக்கும்.
==============================================
இதென்னடா பெடியங்கள் புலிகளுக்கு ஆதரவாகக் கதைக்கத் தொடங்கீட்டாங்கள் என்று குழம்புகிறீர்களா?
என்னதான் புலிகளை நாங்கள் கொள்கையளவில் எதிர்த்தாலும், அவர்களின் அழிவில்தான் எமக்கு விடிவுபிறக்குமென்று போராடினாலும், சிங்களவனிடம் புலிகள் தோற்பதை நாம் முழுமையாக ஆதரிக்கவில்லை. சிங்களவனிடம் புலிகள் தோற்பதை இப்போதைக்கு நாம் விருப்பவில்லை. வேண்டுமானால் சிங்களவர்களிடம் அவர்கள் சற்றுப் பலவீனப்பட்டுப் போவதை விரும்புகிறோம்.
புலிகளின் தோல்வியென்பது எம்மால்தாம் நிகழ்த்தப்பட வேண்டும். அதை நிகழ்த்த சிங்களவனுக்கோ இந்தியனுக்கோ எந்தவொரு சந்தர்ப்பத்தையும் விட்டுத்தர மாட்டோம். எமது கையால், நாம் நிகழ்த்தப்போகும் "புதிய ஜனநாயகப் புரட்சி"யால்தான் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அது விரைவில் நடந்தே தீரும். எமது கையால் அடிவாங்கி தோற்கும்வரையாவது - குறைந்தபட்சம் நாங்கள் புரட்சி தொடங்கும்வரையாவது புலிகள் அழியாமல் இருக்க வேண்டும். அதற்குத்தான் இதெல்லாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கனகாலமாக எழுதேல. இடையில நிர்வாணமோ என்னவோ ஒரு கோதாரி அமைப்புக்காரர் எங்களோட சேருறம் எண்டு அறிக்கைவிட, நாங்களும் அதைநம்பி இந்தாங்கோ தளத்தை நடத்துங்கோ எண்டு திறப்பையும் குடுத்திட்டு 'புதிய ஜனநாயகப் புரட்சி' தொடங்கிறதுக்கான வேலைகளில மூழ்கிட்டம். ஆனா ஒரு கோதாரியையும் காணேல. என்னடா/என்னடி செய்யிறியள் எண்டு கேப்பம் எண்டா அதுக்கும் ஆக்களைப் பிடிக்க ஏலாமல் கிடக்கு. அதாலதான் கொஞ்சக்காலம் எங்கட புரட்சித்தளம் செயற்படாமல் கிடந்தது. இருக்கிற வேலைகளை விட்டிட்டு நானே இப்ப எழுதத் தொடங்கீட்டன். இனி உம்மாண்டியை அடிக்கடி வலையில சந்திக்கலாம்.
தோழமையுடன்,
-உம்மாண்டி
Labels: இராணுவ ஆய்வு, கள ஆய்வு