பார்த்தீர்களா இந்தப் புலிகள் செய்த பாசிசத்தை.. தமது அதிகாரத்தின் மூலம் அப்பாவி மக்களை மட்டுமே அடிபணிய வைத்த புலிகள் இப்போ கூகுள் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் என தமது கொடுங்கரங்களை பரப்பி வருகிறார்கள் என புதிய ஜனநாயகப் புரட்சியை விரும்பும் எம்போன்றவர்கள் தலையில் அடிக்காத குறையாக கத்துகிறோம். அதனைச் செவிமடுக்காத சிலர் நாளை தம்மையும் புலிக் கரங்கள் பற்றும் போதே உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.
சுவிற்சர்லாந்து யப்பான் நியுசிலாந்து முதலான நாடுகள் சிறிலங்காவின் மனித உரிமைகளை தொடர்பான விவாதத்தில் சிறிலங்காவை கண்டனம் செய்துள்ளன. உண்மையில் ஜனநாயக விரோத சக்திகளான புலிகள் இந்த நாடுகளை மிரட்டி அடிபணிய வைத்து இவ்வாறான கண்டனத்தை தெரிவிக்க வைத்துள்ளன. புலிகளைப் போலவே முதலாளித்துவ சக்திகளான இந்த அரசுகள் முதுகெலும்பில்லாமல் புலிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து போயுள்ளன. அவ்வாறு பணியாவிடில் தமது நாடுகளிலும் புலிகள் பாசிச நடவடிக்கைகளை தொடங்கி விடுவார்கள் என்ற பயமே இதற்கு காரணம்.
ஏனெனில் சிறிலங்காவில் அரச படைகள் மனித உரிமைகளை மிக கவனமாக பேணுகிற இந்த வேளையில் இவ்வாறான ஒரு பொய்க் குற்றச்சாட்டை இந்த நாடுகள் சொல்வதன் மூலம் இதன் பின்னணியில் புலிகள் இருப்பது புலனாகிறதல்லவா.
உண்மையில் மனித உரிமைகளை மீறுவது யார் தெரியுமா
புலிகள் தான். நாம் மக்களை ஒன்று திரட்டி புதிய ஜனநாயகப் புரட்சியொன்றினை உருவாக்கும் வரை புலிகளின் இந்த பாசிச நடவடிக்கைகள் தொடரத்தான் போகின்றன.
தம்மிடமுள்ள அதி நவீன விமானங்கள் மூலம் மக்களை கொலை செய்து விட்டு பழியினை அரச படைகள் மீது இலகுவாக சுமத்தி விடுகின்றனர் இந்தப் புலிகள். செஞ்சொலையில் சிறுவர்கள் மீது குண்டு வீசித் தாக்கியது புலிகளின் விமானங்கள் தான் என்ற செய்தி இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. இன்னும் இன்னும் இவ்வாறு பல செய்திகள் புலிகள் மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத வரை வெளியே வராமல்ப் போவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளதால்த்தான் நாம் உங்கள் காலைக் கையைப் பிடித்துக் கெஞ்சுகிறோம். உடனடியாகவே புதிய ஜனநாயகப் புரட்சியொன்றினைத் தொடங்குமாறு.
வாகரையில் மக்களைக் கொன்றது யார்..
புலிகள் தங்கள் உறுப்பினர்கள் பலருக்கு சிங்களம் படிப்பித்து அவர்களை இராணுவத்தில் இணைத்திருக்கிறார்கள். அவர்களும் சிறிலங்கா அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்கிறார்கள். அது மட்டுமல்ல அவ்வப்போது உயிரோடு பிடிபடுவதும் இவர்களே.
ஆக புனிதமான ஒரு இராணுவத்தை வேண்டுமென்றே இவர்கள் களங்கம் செய்கிறார்கள்.
இந்தப் புலிகளின் கைகளில் இப்போது சுவிஸ் முதலான நாடுகளும் விழுந்து விட்டமையானது புதிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை நாம் உடனடியாக ஆரம்பிக்காமல் விட்டதே.. இந்த ஜனநாயகப் புரட்சியை நாம் ஆரம்பிக்க தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் புலிகளின் பாசிச வலை உலகை இறுக்கும்.
ஆயினும் நமது அண்டை நாடான இந்தியா புலிகளின் இந்த மிரட்டல்களுக்கு அடியபணியவில்லை என்பது மக்கள் புரட்சியை வேண்டிநிற்கும் எமது மனங்களை மகிழ்வுறச் செய்கிறது.
மனித உரிமைகளை சிறிலங்கா அரசு மீறுகிறது என பொய்யாக புனையப்பட்ட கதைகளை இந்தியா ஒரு போதும் நம்பத் தயாராக இல்லை. இந்தியா உண்மைகளை புரிந்து கொண்டிருக்கிறது எனபதற்கு இதுவே சாட்சி.
உண்மையில் நாம் விரும்பி நிற்கின்ற புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க இந்தியாவே நமது உற்ற தோழன். சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மீறி தமிழரை அடியோடு அழிக்க நினைக்கிறது என்ற புனைக் கதைகளை நம்பாது இந்தியா சிறிலங்காவின் பக்கமிருந்தமையானது இறைமையுள்ள நாடென்ற வகையில் இலங்கைக்கு வர விருந்த மரியாதைக் குறைவை போக்க உதவியிருக்கிறது. அது போல பபுலிகளின் பாசிச வேர்கள் எங்கெனும் பரவி விட முடியாத படி செய்து மக்களைக் கொண்டு ஜனநாயகப் புரட்சியை உண்டாக்குகின்ற நம்பிக்கையைத் தருகிறது.
ஆகவே தோழர்களே.. புதிய ஜனநாயகப் புரட்சிக்கு தலைமை தாங்குகின்ற அனைத்துத் தகமைகளையும் காலம் எமது தலைவன் கருணாவிற்கு வழங்கியிருக்கிறது. இதை இந்தியாவும் உணர்ந்து கருணாவை தத்தெடுத்து வளர்த்து மக்கள் புரட்சி வெற்றியடைய வைக்க வேண்டும்.
இறுதியாக நண்பர் சிறீரங்கன் சொன்னதை இங்கே நினைவு கூருவோம்.
பாசிசம் எந்து ரூபத்தில் வந்தாலும் அதைக் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள்கூட்டத்தில் மிகவும் கேவலமான-இழி நிலையுடைய உலகப் பார்வை நிலவுகிறது.இது தனக்கெதிரான எந்தக் கருத்தையும் சகிக்க முடியாத தளத்தில் தனது அராஜக மேலாண்மையை நிலைநாட்ட முனைகிறது.அரசியல் மேலாண்மை பெறத் துடிக்குமொரு வர்க்கம் தனது படுகேவலமான அரசியல் சூழ்ச்சிகளுக்காக மாற்றுக் கருத்துகளுக்குச் சாவுமணியடிப்பதும்,அதைத்தொடர்ந்து தாம் சொல்லுவது மட்டுமே தமிழ் பேசும் மக்களின் நலன்பால் அக்கறையுடையதாகவும் மக்கள் மத்தியில் கருத்துக்கட்ட முனைகிறது.
¶ 11/29/2006 01:05:00 PM19 comments
Monday, November 13, 2006
அமெரிக்காவிலும் கைவைத்து விட்டனர் புலிகள்
ஏற்கனவே "கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்" என்று விவரமான கட்டுரையொன்றை எழுதியிருந்தோம். பாசிசப்புலிகளின் உலகளாவிய அடாவடிகளை இனங்கண்டு அவற்றை வேரோடு களைய அனைவரையும் அணிதிரளும் வண்ணம் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான். அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதற்கப்பால் எம்மை நையாண்டி வேறு செய்தார்கள். இப்போது பார்த்தீர்களா புலிகளின் வேலையை? இப்போதாவது நம்புகிறீர்களா நாம் முன்பு சொன்னதை?
அப்படி என்னதான் செய்தார்கள் புலிகள்?
அமெரிக்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் தமது கைவரிசையைக் காட்டிவிட்டார்கள்.
அங்கு நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் புலிகளின் தீவிர ஆதரவாளர் டேனி டேவிஸ் 87 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
புலிகளின் பணத்தில் வன்னி சென்று அங்கு புலிகளைச் சந்தித்துத் திரும்பி வந்தவர் இவர். இவரின் பயங்கரவாதிகளுடனான தொடர்பு எல்லா ஊடகங்களிலும் பிரச்சினையாக்கப்பட்டது. இந்தத் தேர்தலிலும் இவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா இடத்திலும் இவரின் பயங்கரவாதத் தொடர்பு பற்றி தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. புலிகளுடனான இவரின் தொடர்பைக் கருத்திற்கொண்டே இவருக்கெதிரான தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அவ்வகையில் இவருக்குப் படுதோல்வி ஏற்படுமென்று நினைத்திருந்தவேளை, மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் இந்த புலி ஆதரவாளர்.
இது எப்படிச் சாத்தியம்? இங்குத்தான் புலிகளின் கைவரிசை காட்டப்பட்டுள்ளது. தேர்தலில் மோசடி செய்து அவரை வெல்ல வைத்துள்ளனர் புலிகள். கொஞ்சநஞ்ச வாக்கு வித்தியாச வெற்றியல்ல, 87 சதவீத வாக்குகளைப்பெற்று மாபெரும் வெற்றி.
தங்களுக்குத் தெரிந்த அனைத்து அடாவடி முறைகளையும் பாவித்து இவரை வெற்றிபெற வைத்த புலிகளின் கைங்கர்யம் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு மட்டுமன்றி உலகத்துக்கே ஆபத்து. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்போது அமெரிக்காவையே கடித்துவிட்டனர் பாசிசப்புலிகள்.
இதை நான் மட்டும் சொல்லவில்லை. 'நெருப்பு" என்கிற சர்வதேசப் புகழ்பெற்ற இணையத்தளமும் சொல்கிறது. அதைச் சிலர் நக்கலடிக்கிறார்கள். விசயம் தெரியாத சின்னப்பொடியங்கள். நாம் கூகிள் விவகாரத்தில் அன்றே சொன்னதை இப்போது வேறும் சிலர் புரியத் தொடங்கியிருக்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள் வாசகர்களே, இப்பயங்கரத்தை நாம் எதிர்கொள்ள வேண்டாமா? ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியபடி புலிகளின் கை உலகம் முழுவதும் நீள்கிறது. உடனடியாக இதைத் தறிக்க வேண்டும். இதற்கு எமக்குத் தோள்கொடுங்கள். மக்களைத் திரட்டி 'புதிய ஜனநாயகப் புரட்சி'க்கு (இது என்ன சாமான் எண்டு தெரியாத ஆக்கள் குழம்ப வேண்டாம்.) வித்திடுவதன் மூலம் பாசிசப் புலிகளின் ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்.
புலிகளின் இப்படியான தகிடுதத்தங்களை நன்குணர்ந்த ஒருவர் எமக்குப் பக்கத்துணையாகக் கிடைத்திருக்கிறார். புலிகளை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும். தமிழரை மட்டுமன்றி அமெரிக்காவை - ஏன் உலகத்தையே பயங்கரவாதத்தின் பிடியினின்று காப்பாற்ற காலம் எமக்குத் தந்த தலைவன் கருணாவின் துணையோடு எமது இயக்கம் இந்தப் பாசிசப் புலிகளை முறியடிக்கப் புறப்படுகிறது.